திருச்சி மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த ஆம்னி பஸ் - 15 பேர் காயம்
திருச்சி மணப்பாறை அருகே ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.;
திருச்சி,
நேற்று சென்னையில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் மணப்பாறை அருகே யாகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்க உதவினர். பயணிகளும் பஸ்சின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.