தண்ணீர் வாளியில் விழுந்து மூழ்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
ஒன்றரை வயது குழந்தை குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது.;
சென்னை,
சென்னை தேனாம் பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் -சந்தான லட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சந்தான லட்சுமி குழந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது குழந்தை தனுஷ் அலமேலு வீட்டில் குளியல் அறையில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது. இதனால் பதறிப் போன சந்தான லட்சுமி குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இது பற்றி தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.