ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை
நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பூவரசன் (17 வயது). ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற பூவரசன் மாலை வீட்டுக்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு மின்சார ரெயில்கள் வந்து செல்லும் நடைமேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது சென்னை சென்டிரலில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் ஆரம்பாக்கம் ரெயில் நிலைய நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.
நடைமேடையில் நின்ற பூவரசன் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார். அதில் அவர் தலை துண்டாகி பலியாகினார். ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் இதை கண்டதும் அச்சத்தில் அலறினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.