பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தேமுதிக பொதுச்செயலாளர் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.