திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.;
கோப்புப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் 'கூலி' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 'கூலி' திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும். இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும், தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள 'கூலி' திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.