விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை?
விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது;
கோப்புப்படம்
சென்னை,
மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத் துறையின் அறிக்கை அடிப்படையில், எஸ்பிஜி, இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என பல்வேறு வகையான பிரிவுகளின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
அதன்படி நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீசார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், விஜய் மீது காலணி வீசப்பட்டதாக காணொளியும் வெளியானது. இதனால், விஜய் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஜய்யின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. இதன்படி, விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? குறிப்பாக கரூர் பிரசார கூட்டத்தின்போது எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? அப்போது விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதா? என்று பல கேள்விகளை உள்துறை அமைச்சகம் எழுப்பி இருந்தது.
இதற்கு ‘ஒய்’ பிரிவு அதிகாரிகள் அளிக்கும் பதில் அடிப்படையில், விஜய்க்கான பாதுகாப்பு போதுமா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா என்று முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விஜய்க்கு இசட் (z) பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க சி.ஆர்.பி.எப். தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்த நிலையில், இத்தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.