அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?

பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-09 12:17 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமாரை, நிகிதா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக அளித்த புகாரில் அழைத்து சென்ற தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தனிப்படை காவலர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே போல் அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதோடு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் வரும் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் விசாரணை அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்த மோகித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து, சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி விசாரணை துவங்கிய நிலையில், தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தனிப்படை காவலர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் அவர்கள் ஐந்து பேரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, 5 பேரையும் 13-ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் என தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என்று சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ சந்தேகம் எழுப்பி உள்ளது. இதன்மூலம் சிபிஐ விசாரணையில், நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது


Full View

Tags:    

மேலும் செய்திகள்