நெல்லையில் நீதிபதியை நோக்கி காலணி வீச்சு - பரபரப்பு

திருட்டு வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றியதால் கோபம் அடைந்த கைதி, நீதிபதி மீது காலணியை வீசியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-10-07 21:26 IST

நெல்லை,

மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தை சேர்ந்தவர் திரேந்திர சிங் 30. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று இவர் மீது உள்ளது. நெல்லை மத்திய சிறையில் இருந்த அவரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில்  திருட்டு வழக்கில் ஆஜர் படுத்துவதற்காக காவல் துறையினர் கோர்ட்டிற்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்புடன் திரேந்திர சிங் அமர வைக்கப்பட்டிருந்தார். அப்போது திடீரென நீதிபதி இருந்த ஹாலில் திரேந்திர சிங் தமது செருப்பை கழற்றி வீசி எறிந்தார். அந்த காலணி யார் மீதும் படவில்லை அறையில் போய் விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் மீண்டும் நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருட்டு வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றியதால் கோபம் அடைந்த கைதி, நீதிபதி மீது காலணியை வீசியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்