நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை

12 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.;

Update:2025-08-24 23:46 IST

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இப்பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது எனக்கூறி ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கையால் நேற்று காலை மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். 12 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய ஒவ்வொரு விசைப்படகிலும் இறால் மீன்கள் 20 கிலோ, சங்காயம் 200 கிலோ என்ற அளவிலேயே கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் ஒவ்வொரு விசைப்படகிற்கும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்