நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.;
நாகை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பைபர் படகுகளில் செருதூர் பகுதிைய சேர்ந்த முருகையன் மகன்கள் தமிழழகன்(வயது 26), இடும்பன்(47), பாலகிருஷ்ணன்(49), கணேசன் (55) உள்பட 12 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் அனைவரும் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து மீனவர்களிடம் இருந்்து செல்போன்கள், வெள்ளி ஆபரணங்கள், ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி வலைகள், மீன்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களையும் பறித்துச்சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் தமிழழகன், பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் 3 மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர்.இந்த நிலையில் கரை திரும்பிய 12 மீனவர்களில் 7 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்..தொடர்ந்து நடந்து வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் செருதூர் பகுதி மீனவர்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.