நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை கரிமேடு அண்ணா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (38 வயது). பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஷீலா ராணி (32 வயது). இவர்களுக்கு சர்வேஷ் (9 வயது) என்ற மகனும், ரேஷ்மா (7 வயது) என்ற மகளும் உள்ளனர்.
சரண்ராஜிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஷீலா ராணி, அதே பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர்களது 2 பிள்ளைகளும் திருவள்ளூரில் வசிக்கும் அவரது தங்கை வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் சரண்ராஜ், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் இருவருக்கும் இடையே தகாறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ், காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி ஷீலா ராணியின் வயிறு, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து பயந்துபோன சரண்ராஜ், வீட்டின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிய ஷீலா ராணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.