தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது.
"இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தமிழ்நாடு மீனவர்கள் 35 பேரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்றைய தினம் இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் மிரட்டி தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த நிலையில் இன்று கைது நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது. மத்திய பாஜக அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு எத்தனைமுறை கூறினாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இல்லையென்றால். பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.