பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள்.. பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக, பள்ளியில் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில், பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில் அரசு பள்ளிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக பெண் போலீசார், அந்த பள்ளிக்கு சென்று 9, 10-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரித்தனர். அவர்களிடம் மாணவிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இதனால் 11, 12-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த பள்ளியின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது. பள்ளிக்குள் வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, இதுபற்றி புகார்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
வழக்கமாக அரசு பள்ளி மாலை 4.10 மணிக்கு விடப்படும். ஆனால் நேற்று விசாரணை காரணமாக 4.30 மணி வரை பள்ளியில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதன்பிறகு மாணவ- மாணவிகள் வெளியே வந்தனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில் போலீசார் இருந்ததால் மாணவிகளை அழைத்து செல்ல வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாலை 6 மணிக்கு மாணவ- மாணவிகளிடம் விசாரணை நிறைவு பெற்றது. இது குறித்து போலீசார் கூறுகையில், வீடியோவில் 3 மாணவிகள் உள்ளனர். அதில் ஒருவர் ஏற்கனவே பள்ளியில் படித்து வெளியே சென்று விட்டார். மற்ற 2 பேர் பள்ளியில் படிக்கும் மாணவிகள். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.