‘இலவச பஸ் பாஸ் திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘மாணவர் மட்டும்’ சிறப்புப் பேருந்துகளை திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டம் மூலம், காலை மற்றும் மாலை வேளைகளில் 25 சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவை மேற்கோள் காட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டமன்ற உறுப்பினராக, 1989-ல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘மாணவர் மட்டும்’ சிறப்புப் பேருந்துகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம். அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.