அதிமுக அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி - நடிகை கவுதமி

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று நடிகை கவுதமி கூறினார்.;

Update:2025-07-11 13:13 IST

கன்னியாகுமரி,

அதிமுக கொள்கை பரப்பு மாநில துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி கன்னியாகுமரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 4½ ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனால் தான் தீர்வு கிடைக்கும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜய்யின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பது தெரியும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும்.

அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசவே இல்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் அதிமுக அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்