தூத்துக்குடி: செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.;
தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி, சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (வயது 40) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார்(27) ஆகிய 2 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் இன்று (10.07.2025) குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு முருகன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.