இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன்களில் ஆல் அவுட்
2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரெண்டன் டாகெட் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதோடு இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் -ரூட் கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி
ரஷிய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். நேற்று இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை மோடி பரிசளித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பகவத் கீதையை ரஷிய அதிபர் புதினுக்கு பரிசளித்துள்ளேன். கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 79 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
ஐ.பி.எல். ஏலம்: சிஎஸ்கே அணி இந்த 2 வீரர்களை குறி வைக்கலாம் - அஸ்வின் கணிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சி.எஸ்.கே நிர்வாகம் வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
’மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது... ’- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாமதுரைக்கு தேவை வள்ளர்ச்சி அரசியலா அல்லது....... அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கு: மதுரை கலெக்டர், மாநகர காவல் ஆணையர் இன்று ஆஜர்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக உள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது;
மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டிருந்தது. இதனிடையே வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.