இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது; தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்- முதல்வர் ஸ்டாலின்
எனது ஒரே இலக்கு மக்கள்தான்; நான் செய்யவேண்டிய நன்மை மட்டுமே என் கண்களுக்கு தெரியும். அவதூறுகள், வீண் புகார்கள், வெட்டிப் பேச்சுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. ₹1000 உரிமைத்தொகையை, "என் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்" என பெண்கள் கூறுவது எனக்கான பெருமை; மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக்கூடாது- கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். எந்த மொழி வேண்டும் எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும். ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். 20 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும். வராதது என் தோல்விதான். இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
பழனி கோவில் செயற்பொறியாளர் பிரேம் குமார் கைது. பழனி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 லட்சத்திற்கு ரூ.18,000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்
‘எந்திரன்' திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிடில் தமிழகம் ரூ.5 ஆயிரம் கோடியை இழக்க நேரிடும் என மத்திய கல்வி மந்திரி கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி. நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தார்கள் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கூறியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின. இதனை டேக் செய்து “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்று திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னர் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.