எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
கட்சி இணைவதில் என்னை பொருத்தவரை நான் எந்த நிபந்தனையும் முன்வைக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது,
"அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடிப்படையில் அது எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் முழு மனதுடன் வரவேற்கிறேன், அதற்கும் ஒத்துழைப்பும் தருகிறேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவரது மனதிலும் இருக்கிறது. அது நடக்க வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேறும்.
இபிஎஸ் உடனான பிரச்சினை குறித்து அவரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். கட்சி இணைவதில் என்னை பொருத்தவரை நான் எந்த நிபந்தனையும் முன்வைக்கவில்லை. கூட்டணி தொடர்பாக அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறினார்.
மேலும் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள். டெல்லியில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்சி ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு 'பல பிரச்சினைகளை பேச வேண்டியுள்ளது. 6 வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அந்த வழக்குகள் எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படை. அதெல்லாம் நிறைவேறும்பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்' என்றார்.