திருவொற்றியூரில் இளம்பெண் அடித்துக்கொலை? கணவரிடம் விசாரணை
இருவரும் சேர்ந்து இரவு மது குடித்ததாக போலீசாரிடம் கணவர் தெரிவித்து உள்ளார்.;
திருவொற்றியூர்
திருவொற்றியூர்,காலடிப்பேட்டை மேட்டுதெருவை சேர்ந்தவர் கோபால் என்கிற கோலாறு கோபால் (வயது 27). இவர் மீது திருவொற்றியூர், சாத்தாங்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி ஜோதிகா(வயது23). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு கோபால் வந்தார். அப்போது,தனது மனைவி ஜோதிகா வீட்டில் மயங்கி கிடப்பதாக தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்
விரைந்து சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ஜோதிகா இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஜோதிகா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. நெற்றியில் மட்டும் சிறிய காயம் இருந்தது. உடலில் மற்ற இடங்களில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஜோதிகாவின் கணவர் கோபாலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் இரவு மது குடித்ததாக தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.கோபால் முதலில் திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ௨ வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் மேட்டு தெரு பகுதியில் உள்ள வீட்டுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
கோபாலுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் ஜோதிகா மர்மமாக இறந்து உள்ளார். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.