நைஜீரியாவில் துப்பாக்கி சூடு - 20 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.;
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் பிளெட்டுவா மாகாணம் ரியாம் நகரின் டாகோஸ் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் உறங்கிக்கொண்டிருந்த கிராமத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், வீடுகளையும் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.