பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் 6.9 அளவில் பயங்கர நிலநடுக்கம் - 31 பேர் உயிரிழப்பு
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.;
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதிகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.