2 கச்சா எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த அமெரிக்கா
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது;
வாஷிங்டன்,
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இன்று பறிமுதல் செய்துள்ளது. கரீபியன் கடல் பகுதி மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த 2 கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
இதில் ஒரு கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில் ரஷிய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் கப்பல்களை தொடர்ந்து பறிமுதல் செய்யும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.