5-வது டெஸ்ட்: ஆக்ரோஷத்துடன் வாக்குவாதம் செய்த பிரசித் கிருஷ்ணா - ஜோ ரூட்.. களத்தில் பரபரப்பு சம்பவம்
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் 2-வது நாளில் இந்த சம்பவம் நடந்தது.;
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. பென் டக்கெட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆலி போப் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய கிராவ்லி 64 ரன்களிலும், ஆலி போப் 22 ரன்களிலும் அவுட்டாகினார்.
பின்னர் ஜோ ரூட் - ஹாரி புரூக் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் ஜோ ரூட் தனது பங்குக்கு 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜேக்கப் பெத்தெல் களமிறங்கினார்.
இந்த ஆட்டத்தில் 22-வது ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கிராவ்லி ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட், முதல் 4 பந்துகளை வீணடித்த நிலையில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார்.
இந்த ஓவரின் 5-வது பந்தை வீசியதும் பிரசித் கிருஷ்ணா நேராக சென்று ஜோ ரூட்டிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. அதற்கு ஜோ ரூட்டும் பதில் கூற லேசான வாக்குவாதம் உருவானது. இதனையடுத்து கடைசி பந்தில் பவுண்டரி அடித்ததும் ஜோ ரூட் நேராக பிரசித் கிருஷ்ணாவிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இருவரும் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து இந்திய அணியினரும் நடுவரிடம் முறையிட களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.