5-வது டெஸ்ட்: அதிரடியாக சிக்சர் அடித்து அரைசதம் கடந்த வாஷிங்டன் சுந்தர்.. வீடியோ வைரல்
2-வது இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.;
image courtesy:BCCI
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், 'நைட் வாட்ச் மேனாக' இறங்கிய ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் 9-வது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். டெஸ்டில் டி20 போல ஆடிய அவர் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் வெறும் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். குறிப்பாக கஸ் அட்கின்சனின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.