ஆசிய கோப்பை: ஓமனுக்கு எதிரான ஆட்டத்தை தவற விடும் இந்திய முன்னணி வீரர்..?
ஆசிய கோப்பையில் இந்தியா - ஓமன் ஆட்டம் 19-ம் தேதி நடைபெற உள்ளது.;
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் யுஏஇ மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இதனையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனுடன் வருகிற 19-ம் தேதி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தவற விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதன் காரணமாக பணிச்சுமையை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு வழங்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.