ஆசிய கோப்பை: ஸ்ரேயாஸ் அந்த பட்டியலில் கூட இருக்க தகுதியற்றவரா..? அபிஷேக் நாயர் கேள்வி

ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பேசு பொருளாகியுள்ளது.;

Update:2025-08-20 02:16 IST

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இவர்களுடன் ரிசர்வ் வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதான அணியில் யாராவது காயமடைந்து விலக நேரிட்டால் அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும்.

சமீப காலமாக ஐ.பி.எல். மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பாத்த நிலையில் அவர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம்பெறாதது பேசு பொருளாகி உள்ளது.

இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்காததற்கு அவரது தவறும் இல்லை. எங்களது தவறும் இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம்பெற ஸ்ரேயாஸ் தகுதியற்றவரா? என்று இந்திய முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “ஸ்ரேயாஸ் ஐயர் 20 பேர் கொண்ட அணியில் (ரிசர்வ் வீரர்கள் உட்பட) இடம்பெறாததற்கு என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான வலுவான போட்டியாளர். சில நேரங்களில் செலக்சன் மீட்டிங் மற்றும் அதில் பேசப்படும் விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஸ்ரேயாஸ் 20 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியலில் ஏன் இல்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு கூட அவர் தகுதியற்றவரா?

அதை நியாயப்படுத்தக்கூடிய ஆழமான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் 15 பேர் கொண்ட அணியைப் பற்றி பேசவில்லை. 20 பேர் கொண்ட அணியைப் பற்றி பேசுகிறேன். அங்கே ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லாதது அவர் தேர்வாளர்களின் திட்டத்தில் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அங்கே ரியான் பராக் அல்லது வேறு வீரருக்கு பதிலாக அவர் இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்