தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும் - கேரி கிறிஸ்டன் அட்வைஸ்

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.;

Update:2025-07-18 07:37 IST

மும்பை,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, 2-வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அந்த போட்டியில் அவர் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் 3-வது போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் அவருக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சில கருத்துகளை கூறியுள்ளார். அத்துடன் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம் இருந்து சுப்மன் கில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இது ஆரம்ப நாட்கள்தான். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் போட்டி குறித்து நன்கு சிந்திக்க கூடியவராக இருக்கிறார். அதுமட்டும் இன்றி அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதனால் நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களில் அவர் கேப்டன்சி குறித்தும் இன்னும் படிப்படியாக கற்றுக்கொள்வார். கேப்டன் பதவி என்பது நீங்கள் ஒன்றிணைக்க வேண்டிய நிறைய விஷயங்கள். அதில் நீங்கள் சரியாகப் பெற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

ஒரு அணியின் கேப்டன் என்பவர் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர். எனவே தோனியிடமிருந்து சுப்மன் கில் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் கில்லிடம் உள்ளன என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்