ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.;
Image Courtesy: PTI
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல முன்னாள் வீரர்களும் இந்த தொடருக்கான அணித்தேர்வு குறித்து பலவித கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்காக தான் தேர்வு செய்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இந்த அணியில் அவர் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கவில்லை.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த அணி விவரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் / ரிஷப் பண்ட், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா.