இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: போட்டி நடுவரை உடனடியாக நீக்க வேண்டும் - பாக்.கிரிக்கெட் வாரியம்

ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.;

Update:2025-09-16 06:23 IST

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டை ஆசிய போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த போட்டிக்கான நடுவர் ஆன்டி பைகிராப்ட் ‘டாஸ்’ போடும்போது கைகுலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் சொல்லியுள்ளார். இதே போல் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடமும் தனியாக பேசி இருக்கிறார். அவரது செயல் உண்மையான விளையாட்டு மாண்புக்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்