ஐ.பி.எல்.: ஓய்வு பெறும் மகேந்திரசிங் தோனி..? இணையத்தில் பரவும் வதந்தி
சென்னை அணியின் இன்றைய போட்டியை காண தோனியின் பெற்றோர் மைதானத்திற்கு வந்திருந்தனர்.;
image courtesy:PTI
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் விஜய் சங்கர் 69 ரன்களுடனும் (54 பந்துகள்), மகேந்திரசிங் தோனி 30 ரன்களுடனும் (26 பந்துகள்) களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த போட்டியை நேரில் காண தோனியின் பெற்றோர், அவரது மனைவி சாக்ஷி மற்றும் குழந்தை வருகை தந்திருந்தனர். எனவே தோனி இன்றைய போட்டியுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் யூகங்கள் பரவ தொடங்கின.
இருப்பினும் தோனி ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அது வெறும் வதந்தி என்று உறுதியாகியுள்ளது.