ஓமனுக்கு எதிரான ஆட்டம்: டாஸின்போது ரோகித் சர்மாவை ஜாலியாக கலாய்த்த சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.;
image courtesy:twitter/@ACCMedia1
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனை மறந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறினார். அப்போது “கடவுளே நான் ரோகித் சர்மா போல் மாறிக் கொண்டிருக்கிறேனே” என்று ஜாலியாக கூறினார்.
அதாவது இந்திய அணியின் மற்றொரு கேப்டன் ரோகித் சர்மா அடிக்கடி சிறுசிறு விஷயங்களை மறந்து விடுவார். அவரைப்போலவே தாமும் மாறி வருவதாக சூர்யகுமார் யாதவ் ஜாலியாக கூறினார்.