இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.;
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது. கருண் நாயர் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் 5 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். கிராவ்லி 64 ரன்களும், ஹாரி புரூக் 53 ரன்களும் எடுத்தனர்.
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, நேற்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 51 ரன்களும், ஆகாஷ் தீப் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கே.எல். ராகுல் 7 ரன்களிலும், சாய் சுதர்சன் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்ற இங்கிலாந்து அணியின் திட்டத்திற்கு ஜெய்ஸ்வால் முட்டுக்கட்டை போட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் அடித்த ஆறாவது சதம் இதுவாகும். 54 ஓவர்கள் நிலவரப்படி, இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 104 ரன்களிலும், கருண் நாயர் 13 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.