டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா..?
சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.;
செயின்ட் லூசியா,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்றுடன் ( இந்திய நேரப்படி நாளை) முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி மட்டுமே அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களது கடைசி லீக்கில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்த பிரிவு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 4 அணிகளுக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.
செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறுமா..? முழு விவரம் பின்வருமாறு:-
குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.
இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராட உள்ளது.