விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் மிகப்பெரிய இழப்பு கிடையாது... அது வெறும்.. - இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்து தொடருக்கு முன்பாக விராட் மற்றும் ரோகித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். அதிலும் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாத நிலையில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் பேட்டிங்கில் தடுமாறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. இருப்பினும் 3-வது போட்டியில் விராட் கோலியை இந்திய அணி மிஸ் செய்தது.
லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான அந்த 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்தியாவை 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி இருந்திருந்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறினர்.
இந்நிலையில் விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அது வெறும் 2 முன்னணி வீரர்களின் ஓய்வுதான் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜோ ரூட் போல இந்திய அணியின் சீனியர் வீரர்களைப் பற்றி நீங்கள் பேசினால் அது வித்தியாசமானது. சமீபத்தில் ஓய்வு பெற்ற அவர்கள் (விராட் மற்றும் ரோகித்) இல்லாமல் இந்தியா தங்களைப் பற்றி ஒரு சிறந்த கணக்கைக் கொடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். சுப்மன் கில்லை பார்க்கும்போது அவர் ஜாம்பவான்கள் வரிசையில் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது. நான் அதை எதிர்க்க மாட்டேன்
ரோகித் சர்மாக கடைசியாக விளையாடிய 2 தொடர்களில் சராசரியாக 10 ரன்கள் எடுத்திருந்தார், விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 30 ரன்கள் எடுத்திருந்தார். ஆம் அவர்களது இடத்தை நிரப்புவது எளிது கிடையாது. ஆனால் அவர்கள் ஓய்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது. அது வெறும் 2 சீனியர் வீரர்களின் இழப்பு மட்டுமே. ஆனால் பங்களிப்பின் இழப்பு கிடையாது. ஏனெனில் அவர்களிடமிருந்து பெரிய பங்களிப்பு எதுவுமில்லை" என்று கூறினார்.