கிராவ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட என்ன காரணம்.? - கே.எல்.ராகுல் விளக்கம்
ஜாக் கிராவ்லி 2 ரன்னிலும், டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.;
Image Courtesy: @ICC
லண்டன்,
இங்கிலாந்து , இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் , ஜாக் கிராவ்லி தொடக்க வீரர்களாக களமிறக்கினர். முதல் ஓவரை பும்ரா வீசினார். அப்போது, ஓவரின் நடுவே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி நேரத்தை கடத்த முற்பட்டார்.
பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் , ஜாக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, இந்திய அணியினர் திரண்டனர். இதனால், மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இந்திய அணி ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் நேரம் நிறைவடைந்ததால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராவ்லி 2 ரன்னிலும், டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். மைதானத்தில் கில் - கிராவ்லி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கிராவ்லியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட என்ன காரணம்.? என்பது குறித்து கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 6 நிமிடங்கள் மீதமிருந்ததால் 2 ஓவர்களை வீசாமல் இருக்க எந்த அணியும் மூளையற்றவர்கள் கிடையாது. அதனால் 3வது நாள் முடிவு திரைப்படம் போல முடிந்தது. நாள் முழுவதும் பீல்டிங் செய்த பேட்ஸ்மேன் நாளின் இறுதியில் வந்து 2 ஓவர்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும்.
அங்கே ஒரு விக்கெட் விழுந்திருந்தால் எங்களுக்கு கச்சிதமாக அமைந்திருக்கும். இல்லையென்றாலும் நாளை நாங்கள் அனலாக செயல்படுவோம். அவ்வாறு நடந்தது விளையாட்டின் ஒரு அங்கம். ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான எனக்கு கடைசி 5 நிமிடங்களில் கிராவ்லி எப்படி இருந்திருப்பார் என்பது தெரியும். அது அனைவருக்குமே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.