இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்..? - இயான் மோர்கன் கணிப்பு
இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜாஸ் பட்லர் அந்த பதவியில் இருந்து விலகினார்.;
Image Courtesy: @ICC
லண்டன்,
பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்வி காரணாமாக இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் (ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக செயல்பட்டு வந்த ஜாஸ் பட்லர் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் எழுந்தன. அதில் ஜோ ரூட், ஹாரி புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு இரண்டு விருப்பங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், அந்த விருப்பங்கள் அவர்கள் எடுக்க விரும்பும் திசையைப் பொறுத்தது. நீங்கள் எப்போதும் ஒரு இலக்கை மனதில் வைத்திருப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில், அணி சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், திடீரென எல்லாவற்றையும் வெல்ல முயற்சி செய்து வெளியேற முடியாது.
உங்கள் முழு பலத்தையும் எதற்காக செலுத்துகிறீர்கள் என்பது குறித்து முன்னோக்கிச் செல்லும் ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். பென் ஸ்டோக்ஸை முழுநேர அடிப்படையில் அல்லாமல் பகுதிநேர கேப்டனாக நியமிக்கலாம். ஆனால், அவரைத் தேர்வு செய்யும் பட்சத்தில் பெரிய தொடர்களுக்கான தயாரிப்பில் பென் ஸ்டோக்ஸ் தடையின்றி அணிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று, பின்னர் அந்த தொடர்கள் வரும் வரை டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும்.
அதேசமயம் கடந்த மூன்று நான்கு வருடங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தினால், ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் கேப்டன் பதவி வகித்தார். அவர் மிகவும் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடி வருவதை நாங்கள் காண்கிறோம். அதனை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தலைமைப் பொறுப்பு அவருக்கு சுமையாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.