மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 104 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மந்தனா களமிறங்கினர்.;
image courtesy:BCCI Women
மும்பை,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.
பொறுப்பாக ஆடிய ஜோடி எதுவான பந்துகளை பவுண்டரிக்கும் ஓட விட்டது. இதனால் இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடி 17.4 ஓவர்களில் பிரிந்தது. மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கியுள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 22 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 129 ரன்கள் அடித்துள்ளது. ஷபாலி வர்மா 63 ரன்களுடனும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.