மகளிர் உலகக்கோப்பை: திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மாற்றம்

மகளிர் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.;

Update:2025-08-22 15:01 IST

பெங்களூரு,

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

இதனிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டது. இதன் காரணமாக இந்த மைதானத்தில் உள்ள போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் திட்டமிட்ட படி இந்த தொடர் தொடங்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் இந்த தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் செப்.30-ம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா- இலங்கை இடையிலான தொடக்க ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்