உலக குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
லிவர்பூல்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனையான அலிஸ் பம்ப்ரேவை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது. இது இந்தியாவின் 4-வது பதக்கமாகும். மீனாட்சி அடுத்து மங்கோலியாவின் லுட்சாய்கான் அல்டான் செட்செக்குடன் இன்று மல்லுகட்டுகிறார்.
இரவில் நடந்த அரையிறுதியில் (57 கிலோ) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் வெனிசுலாவின் கரோலினாவை சாய்த்து இறுதிசுற்றை அடைந்தார். இதனால் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிட்டுவது உறுதியாகி விட்டது.
ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீரர் ஜதுமணி சிங் 0-4 என்ற கணக்கில் உலக சாம்பியனான கஜகஸ்தானின் சன்ஷார் தஷ்கென்பேவிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
இந்திய வீரர்களில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை. உலக குத்துச்சண்டையில் ஆண்கள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லாதது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.