ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது: கிலோ ரூ.60க்கு விற்பனை


ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது: கிலோ ரூ.60க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 July 2023 4:17 AM GMT (Updated: 4 July 2023 4:43 AM GMT)

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது.

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் இல்லை; குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story