இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 July 2025 2:18 PM IST
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கவுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 16க்குள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 17ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை தரப்பட்டு, ஜூலை 18ல் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.
- 14 July 2025 2:16 PM IST
6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை
"நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14 July 2025 1:53 PM IST
யார் பின்னாலும் செல்லப்போவதில்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்
யார் பின்னாலும் செல்லப்போவதில்லை. யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தப்போவதில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதே பாதையில் ஓபிஎஸ் வழி நடத்த உள்ளார். இயக்கத்தை கட்டிக் காப்பதுடன் தமிழக எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது.செப்டம்பர் 4ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடைபெறும் என்று அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
- 14 July 2025 12:56 PM IST
பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்
திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி சமையலறையில் இருந்த பொருட்களையும் மர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர். மது போதையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 July 2025 12:13 PM IST
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- 14 July 2025 11:57 AM IST
சரோஜாதேவி மறைவு - ரஜினிகாந்த் இரங்கல்
பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை, அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 14 July 2025 11:28 AM IST
வனிதா விஜயகுமார் 1 வாரத்தில் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்சர்ஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி இருப்பதாகவும், அப்பாடலை நீக்கக் கோரியும் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
- 14 July 2025 11:05 AM IST
8 சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் விட்டுச்சென்ற நபர் - ஓட்டுநர் செய்த செயல்
சென்னை: தண்டையார்பேட்டையில் 8 சவரன் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த கைப்பையை, ஆட்டோவில் விட்டுச்சென்ற பயணியிடம் போலீசார் மூலம் ஒப்படைத்த ஓட்டுநர் சரவணனுக்கு காவல்துறை தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 July 2025 10:59 AM IST
விமானத்தில் இயந்திரக் கோளாறு
சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் ஐதராபாத் புறப்பட்டது.
- 14 July 2025 10:53 AM IST
இயக்குநர் மாரி செல்வராஜ் வேதனை
சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது.'வாழை' இறுதிக் காட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.


















