இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
x
தினத்தந்தி 1 Dec 2025 9:28 AM IST (Updated: 1 Dec 2025 7:28 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
    1 Dec 2025 3:23 PM IST

    கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

    கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்க கூடும் - வானிலை மையம்
    1 Dec 2025 3:19 PM IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்க கூடும் - வானிலை மையம்

    வங்கக் கடலில் வலுவிழந்த டிட்வா, இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என வானிமை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு - புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • டிஜிட்டல் அரெஸ்ட் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்
    1 Dec 2025 3:16 PM IST

    டிஜிட்டல் அரெஸ்ட் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்

    நாடு முழுவதும் பதியப்பட்டுள்ள ‘டிஜிட்டல் அரெஸ்ட்' தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும் எனவும், சிபிஐக்கு முன் அனுமதி அளிக்காத மாநிலங்கள், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது.

  • 1 Dec 2025 2:05 PM IST

    கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

    சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் எனவும் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

  • 1 Dec 2025 1:11 PM IST

    ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - செல்வப்பெருந்தகை வாழ்த்து

    “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    50 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம். இன்னும் பலப்பல விருதுகளைப் பெற்று திரையுலகிலும் புகழுடன் வாழ விரும்புகிறோம்.”

  • 1 Dec 2025 1:06 PM IST

    எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

    அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், கல்வி நிதியை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

  • 1 Dec 2025 12:52 PM IST

    வரலாறு காணாத உச்சம் கண்ட பங்கு சந்தைகள்

    மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் 452.35 புள்ளிகள் உயர்ந்து 86,159.02 புள்ளிகளாக உள்ளது.

    இதனால், அதானி போர்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், பாரத வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.85 புள்ளிகள் உயர்ந்து 26,325.80 புள்ளிகளாக இருந்தது.

  • 1 Dec 2025 11:54 AM IST

    மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்?

    டிட்வா புயல் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 1 Dec 2025 11:30 AM IST

    நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

    நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்த உள்ளார். அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

    இதனை முன்னிட்டு, அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

    கல்விக்கான நிதியை அதிகரித்து வழங்குவது, நெல்லுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதம் உள்ளிட்ட விவகாரங்களை தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

  • 1 Dec 2025 11:28 AM IST

    எதிர்க்கட்சிகள் அமளி மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story