இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 May 2025 5:21 PM IST
6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை
சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். தபால் துறையில் வேலை செய்து வந்த தஸ்தகீர், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மென்பொருள் பற்றிய புரிதல் இல்லாததால் விபரீத முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
- 21 May 2025 4:44 PM IST
திருவண்ணாமலையில் கட்டப்பட்டு முதல்-அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி. பணிக்குச் செல்லும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் காப்பகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
- 21 May 2025 4:41 PM IST
அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் - விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 May 2025 4:38 PM IST
"மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.." - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது - ஒவ்வொன்றும் அதன் சொந்தக் குரலைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியம்.
மோடி அரசாங்கம் கவர்னர்களை தவறாகப் பயன்படுத்தி அந்தக் குரல்களை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தடுக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 May 2025 4:09 PM IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த விமானங்கள் திடீர் ரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
- 21 May 2025 3:18 PM IST
திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் - சீமான்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை, அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லை. அரசு அலுவலகங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.
- 21 May 2025 3:17 PM IST
தேர்தல் நிதியை குறைக்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு
தேர்தல் நிதி வழங்குவதை வரும் காலங்களில் பெருமளவில் குறைக்க உள்ளதாக எக்ஸ் தளத்தின் உரிமையாளர் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் பரப்புரைக்காக ரூ.2,500 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தார் மஸ்க். டிரம்புக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததால் அவரது டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 21 May 2025 3:15 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
21-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர். ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
- 21 May 2025 3:11 PM IST
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்: அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன..?
டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.
- 21 May 2025 2:36 PM IST
9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளது. மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.









