இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 March 2025 4:56 PM IST
செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடப்பட்டு உள்ளன. மடிக்கணினிகள் திருடப்பட்டது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 26 March 2025 4:41 PM IST
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மார்ச் 29-ந்தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 26 March 2025 4:29 PM IST
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து, மறைந்த நடிகர் மனோஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மனோஜின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்கு பின்னர் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் மனோஜின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- 26 March 2025 3:56 PM IST
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வரப்பட்டு சம்பளம் தராமல் வேலை வாங்கி வந்த நிலையில் மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- 26 March 2025 3:52 PM IST
இலங்கை கடற்படையால் கைதான காரைக்கால் மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மந்திரி லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.
- 26 March 2025 3:51 PM IST
மக்களவையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
- 26 March 2025 3:23 PM IST
தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்ச் 29-ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
- 26 March 2025 3:00 PM IST
வரும் 30ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 26 March 2025 2:52 PM IST
புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
- 26 March 2025 2:38 PM IST
டெல்லியில், மும்மொழி கொள்கை பற்றி ம.தி.மு.க. எம்.பி. வைகோ செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தி திணிக்கப்பட்டால், நாம் கலாசாரம், மொழி ஆகியவற்றை இழந்து விடுவோம். 1965-ம் ஆண்டு நாம் போராடினோம். தமிழகம் ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்று கொள்ளாது என்று பேசியுள்ளார்.








