ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

பாசன நிலங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சென்னை,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 2-ம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக, பாசன நிலங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காலை 8 மணி வரை 67 நாட்கள் தண்ணீர் திறப்பு மற்றும் 44 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற முறையில், 12,000 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேற்கண்ட தகவலை நீர்வளத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






