அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மெகா பேரணி; இந்தியா கூட்டணி அறிவிப்பு


அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மெகா பேரணி; இந்தியா கூட்டணி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2024 9:32 AM GMT (Updated: 24 March 2024 10:26 AM GMT)

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்பட உள்ளது.

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

அதேவேளை இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை 21ம் தேதி இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் வரும் ஞாயிற்றுகிழமை (மார்ச் 31) டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த உள்ளன.

இந்த பேரணியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாக இந்தியா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.


Next Story