விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து


விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா?சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து
x

விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? என்பது பற்றி சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தென்காசி

ஒன்றைச் சொல்லிவிட்டு, ''விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!'' என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.

இங்கே விளையாட்டு என்ற சொல் 'பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள்.

காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

சாதிக்க முடியும்

கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள்.

சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும்; பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.

கைப்பந்து வீரர் பி.ஜெகதீசன்

இதுகுறித்து சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழகம் செயலாளருமான பி.ஜெகதீசன்:- சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன்மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு உள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி, ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை, பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது.

ஷைனி வில்சன்

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொதுமேலாளருமான ஷைனி வில்சன்:- மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுதர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.

மனரீதியாக பாதிப்பு

நெல்லை மாவட்ட ஆக்கி கழகத் தலைவரும், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலருமான சேவியர் ஜோதி சற்குணம்:- தற்போது நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உணவுகளும் கிடைக்கிறது. இதனால் அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அதிகம் சாதனை படைக்க முடியும். தற்போதைய இளைஞர்களிடம் உடல் தகுதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளது. ஆனால் அவர்கள் கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்டவற்றில் மூழ்கி கிடப்பதால், உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியால் தான் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஒரு விளையாட்டு வீரனால் தான் வெற்றி, தோல்வியை சமமாக பார்க்க முடியும். தற்போது இளைஞர்களிடம் விளையாட்டு குறைந்து வருவதால் பலர் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் ஒரு சிறிய பிரச்சினையை கூட எதிர்கொள்ள முடியாமல் போகிறது. மேலும் தற்கொலை மற்றும் மணவாழ்க்கையில் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கு விளையாட்டு இல்லாததும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஆக்கியை வளர்ப்பதற்காக நாங்கள் பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம். நெல்லையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். அகில இந்திய ஆக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கான தமிழ்நாடு ஆக்கி அணி வீராங்கனைகள் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. மேலும் 100 வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் பயிற்சி அளித்து வருகிறோம். இதனால் விளையாட்டில் மாணவிகள் சாதனை படைக்க முடியும். விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்க முடியும்.

உடற்கல்வி ஆசிரியர்

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹில்டா:- இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே விளையாட்டு ஆர்வம் குறையவில்லை. ஆனால் இளைஞர்களை வேலைக்கு செல்லுங்கள் என்று பெற்றோர்கள் கூறுவதாலும், மாணவர்கள் படிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும்தான் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது. விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன. விளையாட்டு, உடற் பயிற்சி இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். இதை இளைஞர்கள் உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக கருதி விடக்கூடாது. உடலுக்கும், உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு என்பதை புரிந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கொரோனாவுக்கு பிறகு குழு விளையாட்டு குறைந்து வருகிறது. வீரர், வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். அனைத்து பள்ளிக்கூடங் களிலும் விளையாட்டு மைதானம் அமைய வேண்டும். விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆரம்பப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நியமித்து 1-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு விளையாட்டு கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சாதனை படைக்க முடியும்.

மதிப்பெண்கள்

தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு:- தென்காசி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டில் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தகுதியான பயிற்றுனர்கள் நியமிக்கும்போது இன்னும் மாணவர்-மாணவிகள் விளையாட்டில் சாதனை செய்ய இயலும். குறிப்பாக கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானங்கள் ஒரு பஞ்சாயத்திற்கு ஒன்று என்று நிறுவப்படும்போதும், அதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடும்போதும் மிகவும் பயனுள்ளதாக அமையும். கல்வித்துறையில் விளையாட்டுக்கான தனி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். அதாவது ஒரு மாணவன் மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ சாதனைகள் புரியும்போது அதற்கு மதிப்பெண்கள் வழங்கி அதனை படிப்பு மதிப்பெண்களுடன் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் இளைஞர்களுக்கு விளையாட்டில் இன்னும் ஆர்வம் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story