துரோகத்தால் துன்பத்தில் துவண்ட சாவித்திரி


துரோகத்தால் துன்பத்தில் துவண்ட சாவித்திரி
x
தினத்தந்தி 11 Jan 2019 12:31 PM GMT (Updated: 11 Jan 2019 12:31 PM GMT)

சாவித்திரி கதாநாயகியாக நடித்த கடைசி படம் ‘பிராப்தம்.’ இந்தப் படத்தில் நீ நடிக்காதே. உனக்கு பதிலாக வேறு ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, அவரைப்போடு என்று நல்ல முறையில் சாவித்திரிக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெமினிகணேசன்.

ஜெமினிகணேசன் சொன்னதைக் கேட்டதும் அதிகமாக கோபப்பட்டிருக்கிறார் சாவித்திரி. “முடியாது, நான் தான் நடிப்பேன். என்னுடைய எடையைக் குறைக்கப் போகிறேன். நீச்சல் அடித்தால் தான் உடல் எடையை சீக்கிரம் குறைக்க முடியும் என்று என்னுடைய சிநேகிதிகள் கூறினார்கள். என்னால் வெளியே ஓட்டல், கிளப்புகளில் உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் அடிக்க முடியாது. அதனால் வீட்டு காம்ப்பவுண்ட் உள்ளேயே நீச்சல்குளம் கட்டப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ஜெமினிகணேசன், “நீ சொல்கிறபடி அவ்வளவு சீக்கிரம் எடையைக் குறைக்க முடியாது. இது ஒரு சில நாட்களில் குறைக்கக்கூடிய விஷயமல்ல. உடலை மெது, மெதுவாகத்தான் குறைக்க முடியும். குறிப்பாக உணவுக் கட்டுபாடு, நடைபயிற்சி, முறையான உடற்பயிற்சி வேண்டும். அதுமட்டுமில்லாமல் மனையடி சாஸ்திரப்படி வீட்டிற்குள் நீச்சல் குளம் கட்டக்கூடாது. அது நல்லதல்ல” என்றும் கூறியிருக்கிறார்.

ஜெமினியின் சொல்பேச்சைக் கேட்காமல் நீச்சல் குளத்திற்காக சாவித்திரி தோண்டிய குழி, அவரது துன்பத்திற்கான வழியாக மாறிவிட்டது.

‘ஆண்களுக்கு எந்தவிதத்திலும் பெண்கள் குறைவானவர்கள் இல்லை’ என்ற ரீதியில் வாழ ஆசைப்பட்டாா். “நடிகை பானுமதி திரைப்படம் இயக்கும் பொழுது, நீ இயக்க முடியாதா?” என்று சாவித்திரிக்கு நெருக்கமானவர்கள் அவரை உசுப்பிவிட்டார்கள். அந்த உசுப்பேற்றுதல்களை, தன் மேல் பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்பட்டதும் கடைசி காலத்தில் அவர் அடைந்த துன்பங்களுக்கு ஒரு காரணம்.

1970-களின் ஆரம்பத்தில் படம் தயாரிக்கவும், இயக்கவும் முடிவு செய்த சமயம், எல்லா தயாரிப்பாளர் களையும் போல் பணத்தை வெளியிலிருந்து யாரிடமும் வாங்கவில்லை. தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டே படம் எடுத்தார். ஆனால் அடுத்தடுத்த தயாரிப்புகளில் வருமானவரி சோதனை, படத்தயாரிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை, பைனான்சியர்களின் கெடு பிடிகள், ஜெமினிகணேசனோடு பகை, உதவி செய்கிறோம் என்று கூறிய சிநேகிதிகள் அந்த நேரம் பார்த்து காணாமல் போனது என அடுத்தடுத்து ஏற்பட்ட துன்பங்கள் சாவித்திரியை அசைத்து விட்டது. கவலையை மறக்க மதுவின் துணையை அதிகம் நாடினாா். வீட்டிலுள்ள நகைகள் திருட்டு போயின. கடன் வாங்கிய பணத்தை யாரும் திருப்பிக் கொடுக்கவில்லை. சாவித்திரிக்கு ஆரம்ப காலங்களில் உதவி செய்தவர்களே, அவருக்கு துரோகத்தையும் செய்தனர். அவர் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்கவில்லை. படத் தயாரிப்பின் மூலமாக பல நஷ்டங்களும், கஷ்டங்களும், அவமானங்களும் அவருக்கு கிடைத்தது.

1956-ம் ஆண்டு அபிராமிபுரத்தில் 1,500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்தவர், புகழும், பணமும் கிடைத்த பிறகு, தி.நகரில் உள்ள அபிபுல்லாத் தெருவில் கனவு மாளிகையைக் கட்டினார். அந்தக் கனவு மாளிகையும் அவரை விட்டுப் போனது.

சோதனையான காலக்கட்டத்தின் உச்சத்தில், அபிபுல்லா வீட்டைக் காலி செய்து விட்டு, அதன் அருகிலேயே இருந்த தன்னுடைய சிறிய வீட்டிற்கு குடியேறினார். பெரிய வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் ஜெமினியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சாவித்திரி குடியேறிய வீட்டின் ஜன்னலை திறந்தால், அவர் வசித்த மாளிகை தெரியும். அவுரங்கசீப் தன் தந்தை ஷாஜகானை வீட்டுக் காவலில் வைத்த போது, அங்கிருந்தே தான் கட்டிய தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டிருப்பாராம் ஷாஜகான். அதுபோல ஜன்னல் வழியாக தன்னுடைய கனவு மாளிகையை வெகு நேரம் பார்ப்பாராம் சாவித்திரி.

1970-ம் ஆண்டுகளின் இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டிருந்தார் சாவித்திரி. அந்த நேரம் மிகப் பிரபலமான படத்தயாரிப்பாளராக இருந்த ஒரு வருக்கு, பண உதவி கேட்டு இரண்டு மூன்று முறை போன் செய்தார். அவருடைய உதவியாளர் தான் எடுத்து பேசியிருக்கிறார். அவரிடம், “எனக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும். மருத்துவச் செலவிற்கு தான் கேட்கிறேன். மறக்காமல் உங்களுடைய "பாஸ்" வந்தால் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இரண்டு மூன்று நாட்களாகியும் அவரிடமிருந்து பணமோ, எந்தவித பதிலோ வரவில்லை. அப்போது ஏவி.எம். ஸ்டூடியோவில் நடித்துக் கொண்டிருந்த சாவித்திரி, இதுபற்றி உடன் நடிக்கும் நடிகை சுஜாதாவிடம் சொல்லியிருக்கிறார். “இந்தா பாரு சுஜாதா! 1955-ம் ஆண்டுகளில் இந்த தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வருவார். டிரைவர் இல்லாவிட்டால் அவரே என்னுடைய காரையோ, எனது கணவர் காரையோ ஓட்டுவார். எங்கள் இருவருக்கும் ஒரு குடும்ப நண்பராக இருந்தார். 1965-ம் ஆண்டு வாக்கில், ‘நான் படத் தயாரிப்பாளராக ஆசைப்படு கிறேன். எனக்கு கொஞ்சம் பணம் உதவி செய்யுங்கள்’ என்று கேட்டதால், நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். ஆனால் இன்று, நான் அவரிடம் பத்தாயிரம் ரூபாய் தான் கேட்கிறேன். அதுவும் மருத்துவ செலவுக்கு என்று போன் செய்தும் அவரிடம்இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று கூறி கண் கலங்கியிருக்கிறார்.

சுஜாதா அந்த தயாரிப்பாளரை சந்தித்து, நடந்த விஷயத்தைக் கூறியும், “எனக்கு எந்த செய்தியும் வரவில்லை” என்று சொன்னதுடன், உதவி செய்வதற்கான அறிகுறியும் தெரியாததால் சுஜாதா திரும்பி வந்து விட்டார். பிறகு ஷோபன் பாபு உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளர் நல்ல செல்வாக்கு உள்ளவர். தன் படத்தில் நடிப்பவர்களுக்கு முறையாக பணம் கொடுப்பார். எல்லாரையும் நன்றாக கவனிப்பார். பலருக்கு உதவியும் செய்திருக்கிறார். ஆனால் சாவித்திரி விஷயத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பது தான் புரியவில்லை.

யோசனை சொல்வதற்கு ஆயிரம் பேர்கள் முன் வருவார்கள். ஆனால் உதவி செய்வதற்கு ஒருவர்கூட முன் வரமாட்டார்கள். இதுதான் மனிதர்களின் உண்மையான முகம்.

ஊர் அறிய தன்னுடைய திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று சாவித்திரி கனவு கண்டார். ஆனால் அவருடைய திருமணம் மிகவும் ரகசியமாக நடந்தது. தன்னுடைய வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று அவருடைய உள்மனதிற்குத் தெரிந்துவிட்டது. எனவே தன்னுடைய மகளுக்கு 16 வயதிலேயே திருமணத்தை முடித்தார். மகளின் 5 வயதிலிருந்தே சீர் சேர்த்தார். மகளின் திருமணத்தையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவர் நினைத்தபடி நடத்த முடியவில்லை. மணமகன் கையில் பெண்ணைத் தாரை வார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சியில் சாவித்திரியோடு ஜெமினி இருக்க வேண்டிய இடத்தில், ஜெமினியின் முதல் மனைவியான பாப்ஜி தான் இருந்தார். அந்த சமயம் ஜெமினி வெளிநாட்டில் இருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், சாவித்திரிக்கு ‘கலைச்செல்வம்’ விருது கொடுத்து சிறப்பிக்க நினைத்தது. அந்த விழாவுக்கு சாவித்திரி வரமாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் சாவித்திரி வந்தார். சாவித்திரியை பேசச் சொன்னார்கள். அவர் பேசும் போது, “முதலில் இந்த விழாவிற்கு வரவேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இங்கே இருக்கின்ற கலைஞர்கள் என் வாழ்க்கையைப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ளவேண்டும் என்பதைச் சொல்வதற்காகவே இங்கு நான் வந்தேன். யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. இன்று நான் அடைந்திருக்கும் நஷ்டத்திற்கும், பட்ட கஷ்டங் களுக்கும் நானே தான் காரணம். என்னைப் போல யாரும் வாழ ஆசைப்படாதீர்கள், குறிப்பாக வாழாதீர்கள். இந்த உலகத்தில் யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். நம்புவதற்கு முன் பலமுறை யோசனை செய்யுங்கள். வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

எத்தனையோ விருதுகளைப் பெற்ற சாவித்திரிக்கு, வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது கிடைத்த கலைச்செல்வம் விருது அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

சாவித்திரிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. அதனால் கடைசி நாட்களில் படப்பிடிப்புக்கு தன்னுடைய மகனுடன் செல்ல திட்டமிட்டார். படப் பிடிப்பு பெங்களூருவில், அங்கு சாளுக்கிய ஓட்டலில் தங்கினார். காலை உணவை சாப்பிட மறந்து விட்டதால், மயங்கி விழுந்தார். ஓட்டல் நிர்வாகம் நடிகை சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னது.

அந்த சமயம் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவைத் தொடர்பு கொண்ட சரோஜாதேவி, சாவித்திரிக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். 1959-ம் ஆண்டு போல ‘கைராசி’ படப்பிடிப்பில் சரோஜாதேவியோடு முரண்பட்டு சண்டைக்குப்போன சாவித்திரிக்கு, கடைசியாக உதவி செய்தவரே சரோஜாதேவிதான். நடிகை ஜமுனாவும் நிறைய உதவிகளைச் செய்தார்.

சரோஜாதேவி எடுத்துக் கொண்ட முயற்சியால், சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டார். வீடு, மருத்துவமனை என மாறி மாறி தங்கி சிகிச்சை பெற்றார். இருப்பினும் 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மரணமடைந்தார். ஜெமினி தன் மனைவி சாவித்திரியின் உடலை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டுக்கு கொண்டுபோய் வைத்தார். எந்த வீட்டிற்கு கொட்டும் மழையில் இரவில் ஓடிவந்து அடைக்கலம் கேட்டாரோ, அங்கிருந்து அவரது கடைசிப் பயணம் இருக்க வேண்டும் என்று ஜெமினி விரும்பினார்.

மனைவி என்ற அங்கீகாரத்தோடு ஜெமினியின் சொந்த வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் நடந்தது சாவித்திரிக்கு மட்டுமே. ‘எல்லோரையும் காப்பாற்றிய ஒருவன், கடைசி காலத்தில் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியாதவனாகி விடுவான்’ என்று ‘பீட்டர் பிரின்பிள்’ என்ற புத்தகம் சொல்கிறது. அது சாவித்திரிக்கு பொருந்திப் போனது.

மிகவும் மனித நேயமுள்ள சாவித்திரியின் குணத்தை, சிலர் வேறு கோணத்தில் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு. தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம், மன நிலையைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்பு, இன்பங்கள், தேவை களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார். அதற்கு கிடைத்த விடைதான், அவருடைய வாழ்க்கையின் இறுதிக் காலமும், முடிவும் என்று சொல்பவர்களும் உண்டு.

ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. அவன் இறந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் வாழுகிறான் என்பது தான் முக்கியம். அந்த வகையில் இன்றைக்கும் சாவித்திரியை நினைவு கூருகிறோம்; எழுதுகிறோம். அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் எடுத்து அது நன்றாக ஓடி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் ‘நடிப்பு’ என்ற தலைப்பில் சாவித்திரியின் படங்களைப் பட்டியலிட்டு பாடங்களாக வைத்திருக்கிறார்கள். சாவித்திரியின் சொந்த ஊரான விஜயவாடாவில் சாவித்திரியின் முழு உருவச்சிலை இன்று கம்பீரமாக நிற்கிறது. ஒரு நடிகைக்கு முழு உருவச்சிலை உண்டு என்றால், அது இந்தியாவிலேயே சாவித்திரிக்கு மட்டும்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்திரியின் இரண்டு பிள்ளைகளும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ‘தா்மம் தலைமுறைகளைக் காக்கும்’ என்பதற்கு சாவித்திரியே சிறந்த உதாரணம்.

இயலாமையால் வடிந்த கண்ணீர்

எச்.எஸ்.வேணு என்கிற கேமராமேனுக்கு 1959-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு சென்ற சாவித்திரி, மணமக்களுக்கு தங்க மோதிரங்களை பரிசளித்ததோடு, வீட்டிற்கு அழைத்து விருந்தும் வைத்திருக்கிறார். விருந்து முடிந்ததும் தங்கத்தட்டில் வெற்றிலை பாக்கு வைத்தும் கொடுத்திருக்கிறார்.

1978-ம் ஆண்டு ‘ஜெகன் மோகனி’ படத்தில் முக்கியமான வேடத்தில் சாவித்திரி நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் பொருளாதாரத்திலும், உடல் தோற்றத்திலும் இறங்கு முகமாக இருந்தார். தான் வாழ்க்கையில் விளிம்பிற்கே வந்து விட்டதாக அவர் உணர்ந்திருந்த தருணம் அது. ‘ஜெகன் மோகனி’ படத்தின் உச்சகட்ட காட்சியை எடுக்கும் போது, கேமராமேன் வேணுவை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்தார் சாவித்திரி.

“ஏய் வேணு, உனக்கு ஒரு மகள் இருந்தாளே, இப்பொழுது எந்த வகுப்பு படிக்கிறாள். அவளை நான் பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. அவள் எந்தப் பள்ளியில் படிக்கிறாள்?” என்று கேட்டிருக்கிறார்.

தியாகராஜ நகரில் இருக்கும் ஹோலி ஏஞ்சல்ஸில் படிப்பதாக அறிந்ததும், புரடொக்‌ஷனில் வேலை செய்யும் ஒரு காரில் லதாவை அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் வந்ததும், அவளைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தவர், தன்னிடம் அவளுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் ஆசீர்வாதத்தையும், கண்ணீரையும், அன்பையும் மட்டுமே பரிசாகக் கொடுக்க முடிந்திருக்கிறது. “அந்த தருணத்தில் சாவித்திரியின் முகமும், கைகளும் செய்வதறியாது துடித்ததை நான் பார்த்து வேதனைப்பட்டேன்” என்று என்னிடம் சொன்னவர் வேணுவின் மகள் லதா.

நான்கு வெளிநாட்டு கார்கள் வைத்திருந்த சாவித்திரிக்கு, அந்த நேரம் சொந்தத்தில் கார் இல்லை; எனவே தான் புரடொக்‌ஷன் காரை அனுப்பினார். ஆனால் இதே சாவித்திரி, 1960-களின் ஆரம்பத்தில் அண்ணா சாலையில் இருந்த ஒரு பீடா கடைக்கு, பீடா வாங்க தன்னுடைய ‘பிளைமவுத்’ வெளிநாட்டு காரை அனுப்பியவர். அறை குறையாக கார் ஓட்டத் தெரிந்த உதவியாளர்கள் கூட, பீடா வாங்கச் செல்லும் பொழுது காரை ஓட்டியே பெரிய டிரைவர்களாக ஆகிவிட்டார்கள். காலம், மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். சாவித்திரியிடம் உதவியாளர்களாக இருந்த பலரும், அவர் கஷ்டத்தில் இருக்கும் காலத்தில் சொந்தமாக கார் வைத்திருந்தார்கள் என்பது முரண் சுவையான விஷயம்.

(தொடரும்)

Next Story