கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு: ரூ.10 லட்சம் செலவை ஏற்ற விஷால்


கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு: ரூ.10 லட்சம் செலவை ஏற்ற விஷால்
x
தினத்தந்தி 10 March 2019 11:15 PM GMT (Updated: 10 March 2019 10:58 PM GMT)

கூடுதல் நாட்கள் படப்பிடிப்பினால் ஏற்பட்ட ரூ.10 லட்சம் செலவை, நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டார்.


விஷால் நடித்து கடந்த வருடம் இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதைத்தொடர்ந்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு காலில் அடிபட்டது. ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதன் பாடல் காட்சியொன்று சென்னை பின்னிமில்லில் படமாக்கப்பட்டது. இதில் விஷாலும், சன்னிலியோனும் நடனம் ஆடுவதாக இருந்தது. கடைசிநேரம் சன்னிலியோனை மாற்றிவிட்டு சனாகானை ஒப்பந்தம் செய்தனர்.

இந்த பாடல் காட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் செலவு ஆனது. எனவே 3 நாட்களில் பாடல் காட்சியை படமாக்கி முடிக்கும்படி தயாரிப்பாளர் அறிவுறுத்தினார். ஆனால் 6 நாட்கள் ஆகிவிட்டது.

இதனால் ஒரு நாள் செலவு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக விஷால் அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் கூடுதல் செலவு சுமையை குறைக்க இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.


Next Story